| Profession | எழுத்தாளர் |
|---|
தஞ்சாவூரின் வட திசையிலுள்ள கருந்திட்டைக்குடியில் மு.சந்திரசேகரன் பிள்ளை -விஜயம்மாள்
தம்பதியருக்கு 18.01.1924 அன்று பிறந்தார்.
சட்டைநாத வாத்தியார் நடத்திய திண்ணைப் பள்ளி யில் கல்வி பயிலத் தொடங்கி னார். தூய
பேதுரு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது உரிய நேரத்தில் பள்ளிக் கட்டணம்
செலுத்த முடியாததால் தேர்வில் கலந்து கொள்ள இயலாமல் பள்ளிப் படிப்பை தொடர முடியாத
சூழல் ஏற்பட்டது. இடைப் பட்ட காலத்தில் தந்தையுடன் கருங்கல் சிற்ப வேலையைக் கற்றுக்
கொண்டிருந்தார். ஒரு சமயம், தான் வேலை செய்யும் இடத்தில் ‘தமிழ்ச் சங்கப் புலவர் கல்லூரி’
மாணவர் களைச் சந்திக்க நேரிடுகிறது. அவர்களைப் போல தானும் புலவருக்குப் படிக்க வேண்டும்
என்கிற ஆர்வத்தில், 8-ஆம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி யடைந்து, இடைநிலையிலும்
தேர்ச்சியடைந்து, புலவர் பட்டம் பெற்றார்.
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், துணை
முதல்வராகவும் 1950 முதல் 1982 வரை 32 ஆண்டுகள் பணியாற்றினார்.
‘ஆதிமந்தி’, ‘புலவர் உள்ளம்’, ‘கரந்தைக் கோவை’, ‘புகழ் பெற்ற தலைவர்கள்’, ‘இரு பெரும்
கவிஞர்கள்’, ‘அருட்புலவோரும் அரும் பெறற் கவிஞரும்’, ‘அண்ணாவின் இதயம் அருந் தமிழ்க்
கலைஞர்’ போன்ற இலக்கண, இலக்கிய நூல்களை எழுதினார். தஞ்சை சரசுவதி மகால்
நூலகத்திற்காகச் சுவடிகளை ஆராய்ந்து ‘தனிப் பாடல் திரட்டு’ 2 பாகங்கள் பொழிப்புரை
விளக்கத்துடனும், ‘திருப்பெருந்துரை புராணம்’, ‘திருநல்லூர் புராணம்’, ‘நீதித்திரட்டு’
ஆகிய நூற் களை குறிப்புரைகளுடனும் பதிப்பித்தார்.
1950-இல் திருமணம். துணைவியார்: பங்கச வல்லி. இவர்களுக்கு மதிவாணன், தமிழ்மணி என இரு
பிள்ளைகள்.
1952 தொடங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை தலைமையேற்று நடத்தினார்.
‘தமிழ்ப் பொழில்’ இதழின் பொறுப்பாசிரியர், தஞ்சை தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர், தஞ்சை
தொல்காப்பியர் கழகத் தலைவர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக கணிப்பொறி வழி சங்க இலக்கிய
அகராதி, சங்க இலக்கியச் சொல்லடைவுத் தொகுப்புப் பணிகளில் சிறப்பு உதவியாளராக
1987-1991இல் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரை
காமராசர் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம் போன்ற வற்றில் தேர்வாளராகவும், வினாத்
தொகுப்பாள ராகவும் செயற்பட்டார். வானொலி நாடகங்களிலும் பங்கேற்றார்.
தமிழக அரசின் ‘பாரதிதாசன் விருது’, திருப்பனந்தாள் பாவலர் மன்றத்தின் ‘பாவல ரேறு’
உட்பட 15-க்கும் மேற்பட்ட பட்டங் களையும் பரிசுகளையும் பெற்றார்.
01.08.2007 அன்று இயற்கை எய்தினார்.