| Profession | அறிஞர் |
|---|
தில்லை ஸ்தானத்தில் நடராச ஐயர்- காமாட்சியம்மாள் தம்பதியருக்கு 18.8.1934 அன்று
பிறந்தார்.
நெய்த்தானத்தில் தொடக்கக் கல்வியைக் கற்று, திருவையாற்றில் உயர்நிலைக் கல்வி கற்றார்.
திருச்சி தூயவளனார் கல்லூரியில் இண்டர்மீடியம் முடித்து, அங்கேயே வணிகவியலில் பட்டம்
பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம் பெற்றார்.
தஞ்சையில் புகழ்பெற்ற குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.பால சுப்பிரமணியன் மகள் கல்யாணி
அம்மையாரை 13.09.1956-இல் மணந்தார். இத்தம்பதியருக்கு சுரேஷ், கணேஷ், ரமேஷ், மகேஷ் என
நான்கு மகன்கள்.
தி.ந.இராமச்சந்திரன் தன் மாமனாரிடமே ஜூனியராகப் பணியாற்றினார். 1967-இல் தந்தையார்
இறந்ததால், வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு, தந்தையார் நடத்தி வந்த எஸ்.எம்.டி. பேருந்து
நிறுவனத்தை நிர்வகிக்கத் தொடங்கினார். அத் தொழிலில் போதிய அனுபவம் இல்லாததாலும்,
தொழிலாளர் போராட்டத்தினாலும் அந்நிறுவனத்தை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. மீண்டும்
வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார்.
தஞ்சையில் இயங்கி வந்த வழக்குகளை அரசு வழக்கறிஞரே நடத்தி வந்த நிலையில், அந்நிறுவனம்
இவரை வக்கீலாக நியமித்தது. இவரது முயற்சியினால் அனைத்து வழக்குகளிலும் கார்ப்பரேஷன்
வெற்றிபெற்றது. இவ்வாறு பல முக்கியமான வழக்குகளில் வெற்றி பெற்று மதிப்புமிக்கவரானார்.
1961-இல் முதன் முதலில் தஞ்சைக்கு வந்து இவர் இல்லத்தில் தங்கிய திருலோக சீதாராமை
உபசரித்து, அவரைப் பேசச் செய்து, அதனைக் கேட்டு மெய்மறந்தார். அவர் நடத்திய ‘சிவாஜி’
இதழில் ஆங்கிலத்திலும், தமிழிலும் 10-க்கும் மேற்பட்ட இவரது கட்டுரைகள் வெளிவந்தன.
திருலோக சீதாராமின் பாடல்களில் சில இவரது ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்தன. 1965-இல்
திருலோக சீதாராம் தலைமையில் அறிஞர்கள் பலர் பங்குகொண்ட ‘தேவசபை என்ற அமைப்பு
முதன்முதலில் திருநெய்தானத்தில் இவரது இல்லத்தில் தொடங்கியது.
இராமச்சந்திரன், நூல்களைப் பராமரிக்கவும், சிறந்த நூல்களை மீளவும் வெளியிடவும் ‘கலா
சம்ரக்ஷண சங்க’த்தை தோற்றுவித்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் தொடர்ந்து பல்வேறு வகுப்பு
களை நடத்தினார். சிவராத்திரி அன்று இவரது தலை மையில் திருவாசக முற்றோதல்
நடைபெற்றது.
இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் 46 நூல்களை எழுதியுள்ளார். 7 நூல்களை பதிப்பித்துள்ளார்.
50 நூல்களை வெளியிட்டார். 1994-இல் இவரது மணிவிழாவும், 2004-இல் பீமரத சாந்தியும்,
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 76-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவும் அறிஞர்களின் சொற்பொழிவுடன்
நடைபெற்றன.
தமிழக அரசின் பாரதி நூற்றாண்டு பரிசு உட்பட பல்வேறு அரசு நிறுவனங்கள், மடம், ஆதீனம்
போன்றவற்றின் தகுதிவாய்ந்த பரிசு களையும் விருதுகளையும் பெற்றார். இவர் 6.4.2021-இல்
காலமானார்.