பேராசிரியர் க. இளமதி சானகிராமன்

பேராசிரியர் க. இளமதி சானகிராமன்

Profession அறிஞர்

Biography

அரியலூர் உடையார்பாளையத்தில் மு.கன்னையா- க.தனலெட்சுமி தம்பதியருக்கு 18.10.1965
அன்று பிறந்தார்.

தொடக்கக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வியை உடை யார்பாளையம் அரசு பள்ளியிலும், குடந்தை
மகளிர் கல்லூரியில் புகுமுக வகுப்பும், இளங்கலை பட்டப்படிப்பும் பயின்றார். அப்போது
மாணவர் தலைவராகத் தோந்தெடுக்கப்பட்டு கவர்னர் பிரபுதாஸ் பட் வாரியின் கைகளால் தங்கப்
பதக்கம் பெற்றார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பொது நிர்வாகம், இளங்கல்வியியல்
மொழியியல் சான்றிதழ், தெலுங்குச் சான்றிதழ், சைவ சித்தாந்தப் பட்டயம், மதுரை காமராசர்
பல்கலைக் கழகத்தில் இதழியல் துறையில் முதுகலைப் பட்டம், பெண்ணியவியல் முதுகலைப்
பட்டயவியல் ஆகிய பட்டங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். சித்தர் இலக்கியம் பற்றிய
ஆய்வையும் செய்துள்ளார்.

1984-இல் திருமணம். கணவர்: நல்லாவூர் இராமானுஜம். இவர்களுக்கு கார்த்திகா, ஏழிசை என
இரு மகள்கள், கோபாலன் என ஒரு மகன்.

புதுவைப் பல்கலைக்கழகம் தொடங்கிய காலம் முதல் தமிழியல் துறையில் சேர்ந்து
விரிவுரையாளர். துணைப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், பேராசிரியர் என 26
வருடங்கள் பணிபுரிந்தார். இவரது மேற்பார்வையில் 75 பேர் இளமுனைவர் பட்டமும், 13 பேர்
முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.

பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு, ஆய்வு ரைஞர் குழு, பாடத் திட்டக்குழு ஆகியவற்றில்
உறுப்பினராகவும், தேர்வுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருபவர். யு.ஜி.சி.யின்
பெரும் ஆய்வுத் திட்டத்தை சிறப்பாக நடத்தி வரு கின்றார்.

இவர், பொது இலக்கியம் 7, வாழ்க்கை வரலாறு 2, சிறுகதைத் தொகுதிகள் 3, சமயம் – சித்தர்
சார்ந்த நூல்கள் 7 உள்ளிட்ட பல நூல்களைத் தந்துள்ளார். இவற்றுள் சில நூல்கள் பல்வேறு
பரிசுகளைப் பெற்றுள்ளன.

கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியின் ‘தமிழ் இலக்கியச் செயலர்’ விருது, அண்ணா மலைப்
பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் பயின்றபோது முதல் மதிப்பெண் பெற்றதற்காக
‘தங்கப்பதக்கம்’, கவிதைப் போட்டியில் முதல் பரிசு, பரம்பரைச் சித்த வைத்திய சங்கத்தினரின்
‘சித்த மருத்துவச் செம்மல்’ விருது, புதுவை அரசின் சிறந்த உடல் ஊனமுற்றோருக்கான
விருது, தனது ‘பெண்ணியம் பேச’, ‘சமயத்தமிழ்’ நூல்களுக்காக கம்பன் புகழ் பரிசுகள்,
மேலும், ‘புதுவைக்குப் புகழ் சேர்ந்த பெண்மணி’, ‘தமிழ் ஒளி விருது’, ‘பாவேந்தர்
பற்றாளர் விருது’, ‘தமிழ்ச் சிற்பி விருது’, ‘சிகரம் தொட்ட மகளிர் விருது’, ‘இலக்கிய
மாமணி’ விருது, ‘செம்மொழி புலமையாளர் விருது’, ‘ஔவை விருது’, செந்தமிழ் மாமணி
விருது’, ‘சுவாமி விவேகானந்தர் விருது’ போன்ற விருதுகளையும் பரிசுகளையும்
பெற்றுள்ளார்.