பேராசிரியர் தே.ஞானசேகரன்

பேராசிரியர் தே.ஞானசேகரன்

Profession அறிஞர்

Biography

திண்டுக்கல் வத்தலக்குண்டு சாந்திபுரம் கிராமத்தில் சா.தேவராஜ் – கு.சிவனம்மாள் (என்கிற)
ஞானம்மாள் தம்பதியரின் மூத்த மகனாக 12.05.1960-இல் பிறந்தார்.

விராலிமாயன்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியிலும், வத்தலக்குண்டு அரசு உயர்
நிலைப்பள்ளியிலும் கல்வியைக் கற்றார். 1977-இல் மதுரை வஃக்ப் போர்டு கல்லூரியில்
பி.யூ.சி., முடித்து, அதே கல்லூரியில் 1981-இல் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றார்.
1983-இல் மதுரை யாதவர் கல்லூரியில் எம்.ஏ. தமிழ் பட்டம் பெற்றார். மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்தில் ‘வத்தலக்குண்டு வட்டார நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் சமூகம்’ என்ற தலைப்
பில் எம்ஃபில் பட்டமும், ‘மந்திரச் சடங்குகள்’ என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றார்.

இவ்வாய்வுக்குப் பிறகு ‘மந்திரச் சடங்குகள் ஞான சேகரன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும்
அளவுக்கு மிக நுணுகிக் களஆய்வு செய்து தினப் பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகள்
எழுதினார். இக்கால கட்டத்தில் (1987) இவர் எழுதிய ‘மக்கள் வாழ்வில் மந்திரச் சடங்குகள்’
எனும் நூல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நாட்டுப் புறவியலுக்குப் பாடநூலாக இடம்
பெற்றது.

இவர் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக இருக்கும்போதே இவரது துறையில் இவரது நூலை இவரது
பேராசிரியர்கள் பாட நூலாகச் சொல்லித் தந்தது யாருக்கும் கிடைக்காத பேறு.

1989-இல் முதுமுனைவர் பட்டத்திற்காக ‘நாட்டுப்புறச் சமயம் தோற்றமும் வளர்ச்சியும்’ எனும்
ஆய்வைத் தொடங்கினார்.

1990-இல் பாண்டிச்சேரி அருங்காட்சியகத் துறையில், பாரதிதாசன் அருங்காட்சியகத்தில்
ஆராய்ச்சி உதவியாளர் பணியில் சேர்ந்தார். மூன்று மாதங்களில் கோவை பாரதியார்
பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர் பணி கிடைத்து, அதில் சேர்ந்துகொண்டார்.

1983-இல் ஞானசேகரனுக்கு இவரது ஒன்று விட்ட தாய்மாமன் மகள் கஸ்தூரிபாயுடன் திருமணம்
நடைபெற்றது. இவர்களுக்கு ஞா.அறிவழகன் என்றொரு மகன்.

1994-இல் இவர் யு.ஜி.சி. பேராய்வுத் திட்டத்தில் ‘தேவேந்திர குல வேளாளர் சமூக
வரலாறும் பண்பாடும்’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார்.

இவர் நாட்டுப்புறவியல், சமூகவியல், பண் பாட்டியல், வரலாற்றியல், திறனாய்வியல் சார்ந்த 44
நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது நூல்கள் பல தன்னாட்சிக் கல்லூரிகளில் பாட நூல்களாகவும்,
பல பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில் பார்வை நூலாகவும் இடம் பெற்றுள்ளன. தமிழ்,
பாரதியார், பெரியார் ஆகிய பல்கலைக் கழகங்களில் பல்வேறு குழுக்களில் உறுப்பினராகச்
செயல்பட்டிருக்கிறார்.

இவர் தமிழக அரசின் ‘சிறந்த கல்வியாளர்’ (2010), ‘கலைமாமணி’ (2011), ‘சிறந்த
எழுத்தாளர்’ (2014) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.